Thursday, June 24, 2010

இன்னா செய்தாரை ஒறுத்தல்…

இன்னா செய்தாரை ஒறுத்தல் என்று ஒரு குறள் தொடங்குகிறது அல்லவா? அந்தக் குறள் நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் நாம் யாருமே அதைப் பின்பற்றுவதில்லை. அப்படிப் பின்பற்றும் ஒருவரை அண்மையில் கண்டேன். அவர் பெயர் ரவிக்குமார் எம்.எல்.ஏ. எம்.எல்.ஏ. என்பது பெயரின் இனிஷியல் அல்ல; அது அவர் வகிக்கும் பதவி. அவரைப் பற்றி அவ்வப்போது என் பத்தியில் விமர்சித்து எழுதுவது என் வழக்கம்.

அப்படிச் செய்தால் பொதுவாக மற்றவர்கள் பகைமைதானே பாராட்டுவார்கள்? ஆனால் ரவிக்குமார் திருவள்ளுவரின் வாக்குப்படி வாழ்பவர் ஆயிற்றே? சமீபத்தில் என்னிடம் பேசிய அவர் புதுவை இளவேனில் சொன்னதாக ஒரு தகவல் சொன்னார். என்ன அது? என் கவிதைகள் மனுஷ்ய புத்திரனின் கவிதைகளை விட நன்றாக இருக்கிறது என்று புதுவை இளவேனில் சொன்னாராம். அதைக் கேட்டதும் எனக்கு ஒருக்கணம் மூச்சே நின்று விடும் போல் இருந்தது. ஆனால் ரவிக்குமார் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இளவேனிலிடம் ரவிக்குமார் “இதை வெளியே எங்கேயும் சொல்லி விடாதீர்கள்; அப்புறம் உயிரோடு நடமாட முடியாது…” என்று சொல்லியிருக்கிறார்:

அதிர்ச்சியில் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த என்னிடம் ரவிக்குமார் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். ”நானும் அப்படித்தான் நினைக்கிறேன்; ஆனால் வெளியே சொன்னால் உயிருக்கு ஆபத்தாயிற்றே?”

நான் ஆமாம் ஆமாம் என்று சொல்லி விட்டுப் பேச்சை மாற்றினேன்.

ரவிக்குமார் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வதென்று எனக்குப் புரியவில்லை. அமைதிப்படை, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்கள் மனதில் நிழலாடின. என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று புரியவில்லையே? தனுஷின் அப்பாவை உயிரோடு புதைக்கிறார்கள் தனுஷின் அடியாட்கள். அந்த சவக்குழியைத் தோண்டியதே தனுஷின் அப்பாதான். டேய் வுட்ருங்கடா, வுட்ருங்கடா என்று அந்த அடியாட்களிடம் கெஞ்சுகிறார் அப்பா. அப்போது அந்த அடியாட்களில் ஒருவன் சொல்கிறான். வுட்ருவோம் பெருசு… ஆனா உம் பையன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இந்தக் குழிய நோண்டில்ல பார்ப்பான்? என்ன செய்யுறது?” என்று கேட்டு விட்டு தனுஷின் அப்பா மீது மண்ணை அள்ளிப் போட்டுப் புதைப்பார்கள்.

மன்னியுங்கள். இந்தக் காட்சி ஏன் அப்போது எனக்கு ஞாபகம் வந்தது என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. ஏதாவது மனக்குறளியாகத்தான் இருக்க வேண்டும். நித்தியானந்தனிடம் பட்ட அடியால் என் மூளையே பிசகிப் போயிருக்கிறதோ என்னவோ?

சரி விடுங்கள். இந்தச் சம்பவத்தை – அதாவது, ரவிக்குமார் எம்.எல்.ஏ. என் கவிதைகள் பற்றிச் சொன்னதை ஒருநாள் மனுஷ்ய புத்திரனிடமே சொன்னேன். அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன் சாரு…”

No comments: